shadow

ஜவுளிக்கடை உடைமாற்றும் அறையில் கேமிரா வைத்தால்…சென்னை காவல்துறை எச்சரிக்கை

hidden-cameraஜவுளிக்கடையில் டிரையல் ரூம் என்று கூறப்படும் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைத்து உடைமாற்றுபவர்களை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை காவல்துறை ஜவுளிக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தி.நகர் உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்ட விரோதமாக ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம். உள்நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

1. ஓட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.

2. ஓட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

3. செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.

4. விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

Leave a Reply