shadow

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு இறைவன் தான் வழிகாட்ட வேண்டும். ராஜ்கிரண்

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது கடந்த பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர எந்த ஒரு உண்மையான அரசியல்வாதிகளும் இல்லாததும் ஒரு குறையாக உள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து தங்கள் கட்சியையும், கட்சியின் நிதியையும் வளர்த்து கொள்ளும் கட்சிகளே இதுவரை உள்ளது.

இந்த நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து ஆழமான கருத்து ஒன்றை நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பேசி முடிக்கும் சாதாரண பிரச்சனை அல்ல. இதுவொரு உலக அளவிலான அரசியல். இந்தியாவும் சிங்கள அரசும் இணைந்து சுமார் ஒண்ணேமுக்கால் லட்சம் தமிழர்களை அழித்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை சித்ரவதை செய்தனர். இன்னும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. உலகில் எங்குமே நடக்காத கொடூரம் அங்கு நடந்துள்ளது.

இந்தியா இறையாண்மை உள்ள நாடு என்பது இந்த விஷயத்தில் காப்பாற்றப்படவில்லை. இந்தியாவும் இணைந்துதான் இந்த கொடூரத்தை செய்தது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்பாடு. இந்த விஷயத்தில் நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும், நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே தவிர இதற்கான எந்த முயற்சியும் நம்மால் செய்ய முடியாது. இறைவன் ஒருவன் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும்

ஈழத்தமிழர்களுக்காக கட்சி ஆரம்பிப்பது, கூட்டத்தில் பேசுவது என்பது அனைத்துமே ஒரு நாடகம். இந்த பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனை என்று தெரிந்தும் ஒருசிலர் அவர்களுடைய கட்சியை பலப்படுத்தி கொள்வதற்காகவும், சுயலாபத்திற்காகவும், சுய சம்பாத்தியதிற்காகவும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். ஈழத்தமிழர்கள் பிரச்சனை அவர்களுடைய முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவுமே தவிர அவர்களால் ஈழமக்களுக்கு எந்தவித உதவியும் இருக்காது’

இவ்வாறு ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறினார்.

Leave a Reply