ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 8500 வீடுகளில் மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள வனப்பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ பிடித்தது. அங்கு காற்று மணிக்கு 100கி.மீ வேகத்தில் வீசுவதால் தீ அதிவேகமாக பரவியது.

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன்டெய்ன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பெரும்பாலான வீடுகளும் சேதமடைந்துள்ளன.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நியூசவுத் வேல்ஸில் இருந்த 2,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ள போதும் முற்றிலுமாக தீயை அணைக்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்த காட்டு தீயில் சிக்கிய 63 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டை பாதுகாக்க முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. சில இடங்களில் தொடர்ந்து எரியும் தீயை அணைக்க ஒரு வார காலம் கூட ஆகலாமென தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply