நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கோஷம் போட்டி 5 விளையாட்டு வீரர்கள் கைது
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பிய ஐந்து விளையாட்டு வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நேற்று நடைபெற்ற ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக “வெளியே போ நவாஸ் வெளியே போ” என்ற கோஷங்களை எழுப்பியதாக ஐந்து இளம் வீரர்களை போலீசார் கைது செய்தனர். லாகூரில் உள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு ரயில்வேதுறை அமைச்சர் கவாஜா சாது ரபிஃக் பங்கேற்று உரையாற்றினார். இதில் கஜாஜாவின் உரையின் போது ஐந்து பேரும் நவாசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து கோஷங்களை நிறுத்தச் சொல்லி கவாஜா ரயில்வே போலீசாருக்கு உத்தரவு போட்டார். ஆனால் ஐவரும் கோஷங்களை நிறுத்தாததால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்த காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்கான காரணம் குறித்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் ரயில்வே செய்தித்தொடர்பாளர் நஜம் வாலி தெரிவித்தார். ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்ட இரண்டாவது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனிக்க வேண்டியது.
Leave a Reply
You must be logged in to post a comment.