shadow

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நாளை ஜல்லிக்கட்டு.

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதால் நாளையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன் வடிவு வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு வர விடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உள்ளம் பூரிக்கிறேன்.  மத்திய அரசின் 1960-ம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்துக்கு மாநில அரசு திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது.  இந்த அவசர சட்டத்துக்கான ஒப்புதல் மாநில ஆளுநரிடம் பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்ற நம் கனவு நனவாகி உள்ளது.

பிரதமரை 19.12.2016 அன்று நேரில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் 7.1.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்காத நிலையில் பொங்கல் திருநாளையொட்டி  ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இந்த ஆண்டும் நடைபெறாத நிலை ஏற்பட்ட காரணத்தால், இது தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று நான் பிரதமரை 19.1.2017 அன்று டெல்லியில்  உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.  எனது கருத்துகளை கேட்டுக் கொண்ட பிரதமர், இந்த பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.  மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய பிரதமர், தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.

எனவே, நான் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்துக்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் டெல்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.  இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது. ஒரே நாளில் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல்  மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றுத் தர காரணமாக இருந்த பிரதமருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் பண்பாட்டைக் காத்திட அறவழியில் போராட்டம் நடத்திய மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கான மாநில அரசின் சட்ட திருத்தத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் இன்று பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டு விட்டன.  அரசமைப்புச் சட்டப்படி இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன் வடிவு 23.1.2017 அன்று தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் நாளையே (22.1.2017) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை காலை 10 மணிக்கு நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடைபெறும் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பார்கள். தமிழ்நாடெங்கும் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாணாக்கர்களும், இளைய சமுதாயத்தினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply