கர்நாடக வன்முறையால் ரூ.1000 கோடி இழப்பு. இன்சூரன்ஸ் கிடைக்குமா? பஸ், லாரி அதிபர்கள் கவலை
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால் கடந்த ஒருவாரமாக பதட்டமான சூழ்நிலை இருந்து வந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக பெங்களூரில் தனியார் பேருந்துகளும் லாரிகளும் கொளுத்தப்பட்டன. இதனால் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு தமிழக பேருந்துகள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியதாவது.
காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகம் முதலில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தை தான் நடத்தி வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது திடீரென கலவரமாக வெடித்தது. இதில் தமிழக பதிவு எண் உள்ள வாகனங்களை சிலர் தாக்கத் துவங்கினர். தமிழக பதிவு எண்ணோடு இருக்கும் அனைத்து வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டு, தீயிட்டும் கொளுத்தப்பட்டது. நாங்கள் கலவரத்தின் போது அங்கு செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே கர்நாடகாவுக்கு சரக்குகளுடன் சென்ற லாரிகள் அங்கு இருந்தன. அந்த மாநிலத்தின் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு லாரிகள் செல்வதால் நிறைய லாரிகள் அங்கிருந்தன.
இந்த சூழலில் செப்டம்பர் 12ஆம் தேதி கலவரத்தின் போது மட்டும் 70க்கும் அதிகமான லாரிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை மத்திய பேரிடர் மேலாண்மை வாரியம் ஏற்று, இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இன்னும் கர்நாடகாவில் எங்களுடைய சரக்கு வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு கர்நாடக அரசும், கர்நாடக காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக மத்திய அரசு உடனே துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகா கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.
தீயிட்டு கொளுத்தப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.