அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சராக ஜெயலலிதா தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன.
இந்த மனுக்களை யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும், இதற்கும் ஜெயலலிதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு, இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிபதிகளிடையே ஜெயலலிதா மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேலும், ஜெயலலிதா தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக்கொள்ளும் என்பதையும், ஜெயலலிதாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
Leave a Reply
You must be logged in to post a comment.