shadow

மூர் மார்க்கெட்டில் விற்கப்படும் செல்போன்கள்.. திருடப்பட்டதாக இருக்கலாம்.. கவனம்
cell-phones1
சென்னையில் துணி எடுக்கணுமா.. தி.நகர், வாகன உதிரி பாகமா புதுப்பேட்டை, குறைஞ்ச விலைல நச்சுன்னு ஒரு போன் வாங்கணுமா.. மூர் மார்க்கெட்..

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கையில், மூர் மார்க்கெட்டில் திருடுப் போன பொருட்களும் அப்படியே அல்ல உதிரிபாகங்களாக விற்பனைக்கு வருகிறது என்கிறது ஒரு ஷாக் ரிப்போர்ட்.

மூர் மார்க்கெட்டில் கிடைக்காத செல்போன் மாடல்களே இல்லை என்ற அளவுக்கு தற்போது நிலைமை சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், களவாடப்படும் செல்போன்கள் மூர் மார்க்கெட்டில் கூவி கூவி விற்கப்படுவதாகக் கூறுகிறது காவல்துறை.

அதாவது, ஐபோன் 6+ செல்போனின் டிஸ்ப்ளே ஒரிஜினல் வேண்டுமா சார்.. இரண்டு நாளில் வாங்கி வைக்கிறேன் என்பார்கள்.

இது திருடப்பட்ட ஐபோன் 6+-ன் டிஸ்ப்ளேவாக இருக்கலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.

அதாவது, திருடப்படும் செல்போன்கள் முழுதாக அப்படியே விற்கப்படாமல், அது உதிரி பாகங்களாக மாற்றப்பட்டு மூர் மார்க்கெட்டில் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் கூறு கட்டி விற்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவிக்கிறது.

சென்னை காவல்துறையினர் நடத்திய விசாரணயில், கார், இரண்டு சக்கர வாகனங்களைப் போலவே, திருடப்படும் செல்போன்களும் உதிரி பாகங்களாக மாற்றப்பட்டு மூர் மார்க்கெட்டில் விற்கப்படுவதால், செல்போன்களை கண்டுபிடிப்பது கடினமாகிவிடுகிறது.

இன்னமும் நாம் செல்போனின் 15 இலக்க ஐஎம்இஐ எண்ணை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படி உதிரி பாகங்களாக பிரிப்பதால், எந்த ஐஎம்இஐ எண்ணாலும் எந்த பயனும் இல்லை.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு செல்போன் திருடுப்போவது 39 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், காணாமல் போன செல்போனை கண்டுபிடிப்பது மட்டுமே இன்னமும் கடினமான விஷயமாகவே உள்ளது.

சிக்கல் என்றால், சர்வீஸ் ப்ரொவைடர்களின் அலட்சியம், ஐஎம்இஐ எண்ணையும் மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு, களவாடிய செல்போனை இதர மாநிலம் அல்லது வெளிநாடுகளில் விற்பது, இதோ இப்படி உதிரிபாகங்களாக மாற்றுவது போன்றவை பட்டியலிடப்படுகின்றன.

செல்போன் திருட்டுக் கும்பல் ஒன்றை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போதுதான், களவாடப்படும் செல்போன்கள் உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் விஷயம் தெரிய வந்துள்ளது.

மூர் மார்க்கெட் மட்டும் அல்ல, பர்மா பஸார், ரிச்சி ஸ்டிரீட் போன்றவற்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கூட திருடுபோன செல்போன்களின் உதிரிபாகங்கள் விற்பனைக்கு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தையில் ஐபோன்6+ டிஸ்ப்ளே ரூ.8,500க்கு கிடைத்தால், இங்கு ரூ.4,5000 முதல் 6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில செல்போன்களுக்கு இவர்கள் உரிய ரசீதையும் தருவதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

Leave a Reply