மு.க.ஸ்டாலின் கைது எதிரொலி: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்
அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை சபாநாயகர் மறுத்ததை தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவி எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுத்ததாக டைம்ஸ் நவ் வீடியோ ஆதாரத்துடன் சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை இன்று சட்டசபையில் விவாதிக்க திமுக செயல் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு இருப்பதால் சட்டசபையில் விவாதிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.
இதனால் திமுகவினர் சபாநாயகருக்கு எதிராக கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து சபைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட அனைவரும் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பதட்டம் நிலவியதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.