அன்னை தெரசவை தமிழக அரசு பின்பற்றுகிறது. முதல்வர் ஜெயலலிதா
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகனில் போப்பாண்டவர் புனிதர் பட்டம் வழங்கவுள்ளர். ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் சென்றுள்ளனர். இந்நிலையில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவது இந்தியாவுக்கு பெருமை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
நோபல் பரிசு பெற்றவரும், ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆப் சாரிட்டி நிறுவனருமான அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட உள்ளது இந்தியாவுக்கு பெருமை.
தமிழகத்தில் பெண்களுக்கு என பிரத்யேகமாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து தமிழக அரசின் ஆதரவுடன் பெண்களின் கல்வி வழங்கப்படுகிறது. எனது தலைமையிலான தமிழக அரசு, அன்னை தெரசாவை பின்பற்றி அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
1994-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்னை தெரசா என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆசி வழங்கினார். 1994ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவிலும் கலந்துகொண்டார். இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
அன்னை தெரசாவின் வாழ்க்கை மற்றும் அவரது பணிகள் அனைத்தும் பலருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இனி புனிதர் தெரசாவாக மேலும் பலருக்கு அவர் ஊக்கம் அளிப்பார்.
இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.