shadow

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கு தள்ளுபடி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

சபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறினார். மேலும் சபாநாயகர் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி சக்கரபாணி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இதே காரணத்தை கூறி சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Reply