shadow

தெலுங்கு மொழியில் பேச திணறிய தெலுங்கு மாநில முதல்வரின் மகன்

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை போல தெலுங்கு மாநிலங்களிலும் தெலுங்கு தெரியாதவர்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் போது, தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட உறுதிமொழியை வாசிக்க முடியாமல் சந்திர பாபு நாயுடுவின் மகன் திணறியதை கூறலாம்

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். உலகின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியது நர லோகேஷ் தான் என பல முறை சந்திரபாபு நாயுடு தன் மகனை பெருமையாக பேசியுள்ளார்.

இந்நிலையில் ஆந்திர எம்.எல்.ஏக்கள் ஓதுக்கீட்டின் கீழ், அம்மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக சமீபத்தில் நர லோகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆந்திர சட்டமன்ற மேலவையின் சபாநாயகர் சக்ரபாணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த பதவிப் பிரமாணத்திற்கான உறுதிமொழியை வாசிக்க நர லோகேஷ் திணறினார். உறுதிமொழியில் இடம் பெற்றிருந்த இறையாண்மை என்ற வார்த்தையை அவருக்கு வாசிக்கவே தெரியவில்லை. சுதந்திரம் என்ற வார்த்தையை வாசிக்க அவ்வளவு சிரமப்பட்டார். நேர்மை என்ற வார்த்தை அவர் வாயில் நுழையவே இல்லை. பின்னர் ஒரு வழியாக சமாளித்து உறுதிமொழியை வாசித்து முடித்தார் நர லோகேஷ்.

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆந்திர அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றத்தின் போது, நர லோகேஷ் கேபினட் அமைச்சராவார் என கூறப்படுகிறது. தெலுங்கு மொழியை வாசிக்கத் தெரியாதவர், கேபினட் அமைச்சரா? என அம்மாநில எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறன.

Leave a Reply