சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தற்போது வெளிவந்துள்ளது

நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 30-ந்தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

137 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறவிருப்பதாகவும் இதுகுறித்த அட்டவணையை வெளியிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.

110 வகையான பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும் என்றும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

அதேபோல் வினாத்தாளை வாசிப்பதற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு அதன் பின்னர் 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்த முழு அட்டவணை மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply