shadow

download

மிழ் சினிமாக்கள் அதிகம் பார்ப்பதாலோ என்னவோ புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே குலைநடுங்கிப்போகிறோம். உடலில் உள்ள செல்களில் முறையற்ற வளர்ச்சியைத்தான் (Cell Disorder) புற்றுநோய் எனக் குறிப்பிடுகிறார்கள்.  புற்றுநோய் திடீரென்று ஓரிரு நாளில் வருவது இல்லை. சராசரியாக 11 வருடங்கள் உடலில் மெள்ள மெள்ள வளர்ந்து, அதன் பிறகே அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால், அதைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய் வந்தாலும் இப்போது பயப்படத் தேவை இல்லை. நவீன சிகிச்சையின் மூலம் குணமாக்க முடியும்.

புற்றுநோய் எப்படி வருகிறது?

நமது உடலில் பல்லாயிரம் கோடி (3 X 10^ 27) செல்கள் இருக்கின்றன. உடலில் அனைத்து செல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும். 

தோலில் இருக்கும் செல்கள் இரு வாரங்களில் புதுப்பித்துக்கொள்ளும்.  24 நாட்களில் ஒரு இன்ச் முடி வளரும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, நுரையீரலில் செல்கள் இறந்து, மீண்டும் புதிய செல்கள் உருவாகும்.  260 நாட்களுக்கு ஒருமுறை கண்களில் உள்ள லென்ஸ் புதுப்பித்துக்கொள்ளும். மூளையில் இருக்கும் சில செல்கள், 21 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளும். இதயத்தில் இருக்கும் செல்கள் 320 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளும். இதில் ஏதேனும் இரண்டு செல்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை ஏதோ ஒரு காரணி உடைக்கும்போது.  அந்த இரண்டு செல்களும் தனித்துவிடப்படும். இவை மற்றொரு செல்லுடன் சேர முடியாது. இந்தக் குறைபாடு தொடரும்போது, தனித்துவிடப்படும் செல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவை ஒன்று சேர்ந்து, ஒன்றாக வளர்ந்து புற்றுநோயை உண்டாக்கும். நம்முடைய உடலில் தினசரி இதுபோன்ற பிணைப்பைப் பாதிக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதைக் கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, அந்த செல்கள் வளர்ச்சிபெற்று, புற்றுநோயாக உருவெடுக்கிறது.

தவறான உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுப்புறக் காரணிகள்தான் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணிகள். சிகரெட், பீடி முதலான புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதும் மிக முக்கியமான காரணி.

ஆல்கஹால் மறைமுகமாக புற்றுநோய் வரக் காரணியாக இருக்கிறது. உணவு செரித்தலின்போது, ஆக்சிஜனேற்றம், ஆக்சிஜன் ஒடுக்கம், முதலான 45,600 வேதியியல் மாற்றப் பணிகள் நடக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களைக் கல்லீரல் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஆல்கஹால்  இந்த நுண்ணூட்டச் சத்துகளை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. மேலும்,கல்லீரலை சிதைவைடையச் (Liver cirrhosis) செய்கிறது. இதனால், ஏதேனும் சில நுண்ணூட்டச் சத்துகள் தொடர்ந்து தடைப்பட்டு உடலுக்குக் கிடைக்காமல் போகும். இதனால் புற்றுநோய் வரலாம்.

சில சமயங்களில் தைராய்டு பிரச்னைகளும் புற்றுநோய் வரக் காரணியாக அமைவது உண்டு. அதிகக் கொழுப்பு, மாவுச்சத்து நிறைந்த உணவுகள், நன்றாக எண்ணெயில் வறுக்கப்பட்ட, பொறிக்கப்பட்ட உணவுகள், அதிக விலங்குக் கொழுப்பு, விலங்குப் புரதம் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதாலும் புற்றுநோய் அதிக அளவு வருகிறது.

உணவுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

செல்களுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் சீராக உறுப்புகளைச் சென்றடைந்தாலே, செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒருவரின் உடல்வாகுக்கு ஏற்ப டயட்டீஷியன் பரிந்துரைப்படி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு என அனைத்து சத்துக்களும் உடலுக்கு அவசியம் தேவை. காய்கறிகள், பழங்களில் இருந்து பல நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கும். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்தான், கல்லீரல் நடத்தும் உணவு செரிமானத்துக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

அப்பளம், வற்றல் மற்றும் ரோட்டோரம் விற்கும் சமோசா, வடை மற்றும் பீட்சா, ஃபிரஞ்ச் ஃபிரைஸ், சிக்கன் வறுவல், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்கு 40 மி.லி எண்ணெய் மட்டும்தான் உணவில் சேர்க்க வேண்டும்.

மிளகாய்த் தூள், மசாலா வகைகள் என பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுகளும் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவையே. வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப்பொடி தயார் செய்து பயன்படுத்துவதே சிறந்தது.

சமைக்கப்படும் உணவின் ஆயுட்காலம் சராசரியாக  நான்கு மணி நேரம்தான். காலையில் செய்த உணவை இரவு சாப்பிட வேண்டாம். இரவு புதிதாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மிக முக்கியமான அறிவுரையே, ஒவ்வொரு வேளை உணவையும் புதிததாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதுதான். ஃபிரிட்ஜில் உள்ள உணவு அறையின் வெப்பநிலைக்கு வந்தவுடன்தான்  சமைத்துச் சாப்பிட வேண்டும். ரெட் மீட் எனச் சொல்லப்படும் ஆடு, மாடு, பன்றி இறைச்சியை அதிகமாகச் சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஸ்டீராய்டு முதலான ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழி சாப்பிடுவது புற்றுநோய்க்குக் காரணமாகலாம். இயற்கைச் சூழலில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழி, மீன் போன்றவற்றை வாரம் ஒரு முறை அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல் அளவோடு சமைத்துச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

புற்றுநோயை வெல்லலாம்!

‘நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்பார்கள். உடலில் எங்காவது சிறிய கட்டி ஏற்பட்டால்கூட புற்று நோயாக இருக்குமோ எனப் பயந்து, பரிசோதனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. பயம் காரணமாகவே பெரும்பாலான நோய்கள் வருகின்றன. மக்கள் விழிப்புஉணர்வுக்கும் எச்சரிக்கைக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது இல்லை. பயம் மன அழுத்தமாக மாறி, அது ஒருவருடைய அன்றாட வாழ்கையில் உணவு, உறக்கம் போன்றவற்றைப் பாதித்து, கடைசியில் நோயைக் கொண்டுவருகிறது. தைரியமாக இருங்கள். எந்த நோய் வந்தாலும் மன உறுதியுடன் சிகிச்சைகளையும் மருத்துவர்களின் பரிந்துரைகளையும் கடைப்பிடித்தால் போதுமானது. புற்றுநோய்தானே மீண்டு விடலாம் என பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்துங்கள். புற்றுநோயை நம்மால் வெல்ல முடியும்.

புற்றுநோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை

நவீனத் தொழில்நுட்பம் மூலம், ஒருவருக்குப் புற்றுநோய் வருமா? வராதா? என்பதை எளிதில் கண்டறியலாம். ரத்தத்தில் உள்ள மூலக்கூறுகளை புரோட்டியோமிக்ஸ் (Protiomics) மற்றும் ஜெனோமிக்ஸ் (Genomics) ஆகிய தொழில்நுட்பங்கள் மூலமாக, 70,000-க்கும் மேற்பட்ட காரணிகளைப் பரிசோதனை செய்து, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? எந்த வயதில் வர வாய்ப்பு உண்டு? என அறிய முடியும். இந்தப் பரிசோதனை விலை மிக அதிகம். சில ஆண்டுகளில் விலை குறைலாம்.

Leave a Reply