பசுக்களை அடுத்து எருதுகளை இறைச்சிக்காக வெட்ட தடை. மும்பை ஐகோர்ட் அதிரடி
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பசுக்களை அடுத்து எருதுகளையும் இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று மாநில அரசு போட்ட உத்தரவை மும்பை ஐகோர்ட்டும் இன்று உறுதிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
மகாராஷ்டிர மாநிலத்தில் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை செய்யும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால் சட்டத்தையும் மீறி, பசுக்களை கொல்பவர்கள் மற்றும் பசுமாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் பசுக்களை அடுத்து எருதுகளையும் இறைச்சிக்காக வெட்ட தடை அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த மும்பை ஐகோர்ட், இறைச்சிக்காக எருதுகளை வெட்ட தடை விதித்த மாநில அரசின் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயத்தில் மாநிலத்துக்கு வெளியே இருந்து இறைச்சி கொண்டுவருவதை கிரிமினல் குற்றமாக்கும் மகாராஷ்டிரா மாநில அரசின் திருத்தப்பட்ட விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் உட்பிரிவை நீக்கியும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.