shadow

தமிழகத்தில் பாஜக காலூன்ற 400 வருடங்கள் ஆகும். ராதாரவி

தமிழகத்தில் பாஜக கட்சி அதிமுக துணையுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் பாஜக காலூன்றி இன்னும் குறைந்தது 400 வருடங்கள் ஆகும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.

தமிழகமெங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று தூத்துக்குடியில் பிரமாண்டமான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராதாரவி பேசியதாவது:

ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என பல அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிச்சுட்டா ஓ.பி.எஸ் அணி நம்ம பக்கம் சேர்ந்துடும், அதை வச்சு இரட்டை இலை சின்னத்தை மீட்டுடலாம். அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தல்லயும் ஜெயிச்சுடலாம்னு நினைச்சுக்கிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி அணியின் கனவுல மண்ணு விழுந்துடுச்சு. எந்தப் பேச்சுவார்த்தையிலயுமே இரண்டு அணியும் இணையுற மாதிரி தெரியலை. இன்னும் இழுபறியிலயேதான் போயிக்கிட்டிருக்கு.

மேலூர்ல தினகரன் வேற கூட்டம் போடப் போகிறார். தொடர்ந்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம்னு வேற அறிவிச்சிருக்காரு. இவர்களால் அ.தி.மு.க அணிகளில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் ரொம்ப குழப்பத்துல இருக்காங்க. இந்த இரண்டு அணிகளை இணைச்சு வக்கிற வேலையத்தான் பிரதமர் மோடி செய்துட்டு இருக்கார். அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டால் கூட தோல்விதான். அ.தி.மு.க.வை கட்டுக்குள் கொண்டுவந்து அப்படியே தமிழகத்துல ஆழமாக கால் ஊன்றி ஆட்சி அமைச்சுடலான்னு பா.ஜ.க நினைக்குது. பா.ஜ.க தமிழகத்துல ஆட்சி அமைக்கணும்னா அதுக்கு 400 வருஷத்துக்கு மேல ஆகும்.

பசிக்கு சாப்பாடு போடுறவன் தெய்வம்னு சொல்லுவாங்க. அந்த சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகளை உற்பத்தி செஞ்சு கொடுக்குற விவசாயிகளை வறட்சி நிவாரணம் வழங்காம விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாம கஷ்டபட வைக்குது மோடி அரசு. டெல்லியில் பட்டினிப்போராட்டம் நடத்தியும், செத்த எலியை தின்னும், அரை நிர்வாணம் போரட்டாம், நிர்வாணப் போராட்டம் செய்தும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஒரு பொருட்டாக் கூட எடுக்காம ஒவ்வொரு நாடா டூர் போயிட்டு இருக்கார் மோடி. இன்னும் மூணே மாசம்தான். அதுக்குள்ள தமிழகத்துல இந்த ஆட்சி கலைந்து சட்ட மன்றத் தேர்தல் வரும். அதுல அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் போட்டியிட்டாலும் இந்த கட்சிகளை டெப்பாசிட் இழக்கச் செய்து தோற்கடிக்கப் போவது விவசாயிகள்தான். தி.மு.க வை ஜெயிக்க வைக்கப் போகிறதும் விவசாயிகள் ஓட்டுதான்’’

இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.

Leave a Reply