மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறியது ராணுவம். வீடுதிரும்பினார் மம்தா
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு தலைமைச் செயலகம்ம் மற்றும் முக்கிய பகுதிகளில் திடீரென ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
மேற்குவங்கத்தில் ராணுவ வீரர்களை குவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இதற்கு தன்னிடம் ஏன் அனுமதி பெறவில்லை என்று கூறிய மம்தா பானர்ஜி, ராணுவம் வெளியேறும் வரை, அரசின் தலைமைச் செயலகக் கட்டிடத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, ‘நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாகக் கூறி அனைத்து மாநில அரசுகளிடம் ஏற்கனவே ஒப்புதல் கோரப்பட்டது. இந்நிலையில், அனுமதி பெறவில்லை என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா திடீரென சர்ச்சையை ஏற்படுத்துவது மனவேதனை அளிக்கின்றது’ என்று கூறினார்.
ஆனாலும் தொடர்ந்து 30 மணிநேரத்திற்கும் மேல், மம்தா பானர்ஜி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் வேறு வழியின்றி இன்று ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. அதனை முழுவதுமாக உறுதி செய்தபின், தற்போது உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்ட மம்தா பானர்ஜி, வீடு திரும்பினார்.
Chennai Today News: Army returns to barracks didi goes home
Leave a Reply
You must be logged in to post a comment.