12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் தீவில் பிறந்த குழந்தை
பிரேசிலில் உள்ள பிரபல சுற்றுலா தீவு ஒன்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பல ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத அந்தத் தீவில், குழந்தைப் பிறப்பு பற்றிய தகவல் அறியாத அந்தப் பெண், கழிப்பறையில் குழந்தை பெற்று பயந்து அலறியுள்ளார். தீவுக்கு வந்துள்ள புது வரவை வரவேற்று மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
பிரேசிலில் உள்ள பிரசித்தி பெற்ற தீவுகளில் ஒன்றான பெர்னாண்டோ டி நோரன்ஹோ என்ற தீவில் அழகிய கடற்கரையும், வனப்பகுதியும் இருப்பபதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்ககான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இந்த தீவில் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் இந்த தீவில் மக்கள் தொகை உயர்வதை விரும்பாத பிரேசில் அரசு, அங்கு குழந்தை பெறுவதற்கு கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது
இந்தத் தீவில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவ வார்டு இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பெற்றபோது, இங்குள்ள பெண்கள் தீவில் இருந்து வெளியேறி பிரேசில் நாட்டின் பிற நகரங்களுக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்தத் தீவில் 12 ஆண்டுகளுக்குப் பின், பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். 22 வயதான அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று குழந்தை பெற்றுள்ளார். வழக்கம்போல் கழிப்பறைக்குச் சென்ற அவருக்கு திடீரென குழந்தை பிறந்தது. குழந்தை வெளியே வருவதைப் பார்த்து அதிர்ந்து போன அந்த பெண் கூப்பாடு போட்டு அலறியுள்ளார்.
உடனடியாக அவரது கணவர் கழிப்பறைக்குச் சென்று குழந்தையைக் கையில் எடுத்து, மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்பதை உணராமல் போன அந்தப் பெண் மயங்கினார். இதையடுத்து அந்தப் பெண்ணும், குழந்தையும் அருகில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
தங்கள் சொர்க்கத் தீவில் 12 ஆண்டுகளுக்குப் பின், குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியானதும், அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.