shadow

பிரதமர் அலுவலகத்தை கலக்கிய அதிமுக எம்பிக்களின் பேரணி

1தம்பித்துரை தலைமையிலான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நாடாளுமன்ற அதிமுக அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்றதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்திக்கச் சென்ற அதிமுக எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக எம்பிக்கள் அனைவரும், நாடாளுமன்ற அதிமுக துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும் அதிமுக எம்பிக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின்னர் நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே பிரதமர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்குள் சென்ற 7 எம்.பி.க்கள், பிரதமர் அலுவலக செயலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்குக் கொஞ்சமும் அக்கரை இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்த அதே தவறை, பாஜக அரசும் செய்து வருகிறது. காவிரி விவகாரத்தை வைத்துக்கொண்டு, மத்திய அரசு அரசியல் செய்கிறது. தமிழகம், இந்தியாவின் ஒரு பகுதிதான் என மத்திய அரசுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. காவிரி விவகாரம் இன்று வரை தீர்க்கப்படாமல் உருவெடுத்து வளர்ந்து நிற்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே முழு காரணம்” என கொந்தளித்தார்.

Leave a Reply