கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்திற்குள் டெல்லியில் ஆட்சியை பிடித்தது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. அதேபோல ஆட்சியை பிடித்த ஒரே மாதத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வினோத்குமார் பின்னி, அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியால் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவதாக கூறிவந்தார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டதாகவும், அதற்கு கட்சி மேலிடம் மறுத்துவிட்டதாகவும் கூறபட்டது.

எனவே மேலும் அதிருப்தி அடைந்த வினோத்குமார் பின்னி ‘டெல்லி மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வர் தவறிவிட்டதாகவும், இன்றைக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நாளைமுதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக வினோத்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஆம் ஆத்மி கட்சியின் குழு, இன்று அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply