shadow

டெல்லி: ஐந்து பிரபல மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம் ஏன்? திடுக்கிடும் தகவல்
surgery
டெல்லியில் சலுகை விலையில் நிலத்தை அரசிடம் பெற்று அதற்கு பதிலாக ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இயங்கி வந்த ஐந்து பிரபல மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்ததாக ஆதாரங்களுடன் நிரூபணம் ஆனதால் இந்த 5 மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 1960 மற்றும் 1990 காலக்கட்டத்தில் சலுகை விலையில் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய மருத்துவமனை, மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாந்தி முகுந்த் மருத்துவமனை, தரம்ஷிலா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புஷ்பவதி சிங் கானியா மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளுக்கு சலுகை விலையில் அரசு நிலம் வழங்கப்பட்டது. இதற்காக ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு, அரசின் சலுகை விலையில் நிலத்தை வாங்கிக் கொண்ட இந்த 5 மருத்துவமனைகளும், நிபந்தனையை மதிக்காமல் ஏழைகளுக்கு மறுத்து அவர்களிடம் பணம் வாங்கி வருவதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது இந்த அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறியதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் விளக்கம் கேட்டு 5 மருத்துவமனைகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் எந்த மருத்துவமனையும் ஏழைகளுக்கு ஏன் இலவச சிகிச்சை அளிக்கவில்லை என்ற காரணத்தை விளக்கவில்லை. இதையடுத்து 5 மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்காமல் ஏமாற்றும் மருத்துவமனைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கக் கோரி 2007-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, 5 மருத்துவமனைகளுக்கும் ரூ.600 கோடி அபராதம் விதித்துள்ளோம். இந்த தொகையை வரும் ஜூலை 9-ம் தேதிக்குள் மருத்துவமனை நிர்வாகங்கள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளோம்.

இவ்வாறு ஹேம் பிரகாஷ் கூறியுள்ளார்.

Leave a Reply