shadow

10 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு செல்லும் முதல் தென்கொரிய ரயில்

கடந்த சில ஆண்டுகளாக எதிரி நாடுகளாக இருந்த வடகொரியாவும், தென்கொரியாவும் தற்போது நட்புடன் நெருங்கி வருகின்றன. இரு நாட்டு தலைவர்களும் அமைதிபேச்சுவார்த்தை நடத்தி பகையை துரத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது இருநாடுகளும் நெருக்கமானதை உறுதி செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வட கொரியாவின் அதிபர் கிம்ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தங்கள் நாட்டின் ரயில்வேயை மேம்படுத்த உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் வேண்டுகோள் விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் தென் கொரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் ரெயில் மூலமாக நேற்று வடகொரியா சென்றனர். தென் கொரியாவின் ரெயில் வட கொரியாவுக்கு சென்று இருப்பது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலகட்டத்தில் இதுவே முதல் முறை ஆகும்.

சியோல் நகருக்கு வடக்கே உள்ள டோராசன் என்ற இடத்தில் இருந்து எல்லையில் உள்ள ராணுவ கட்டுப்பாடு அற்ற பிரதேசத்துக்குள் அந்த ரெயில் சென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பான்மூன் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில் வடகொரியாவின் என்ஜினை இணைத்துக்கொண்டு சென்றதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அந்த ரெயிலில் சென்ற தென் கொரிய ரெயில்நுட்ப வல்லுனர்கள் வட கொரியாவின் ரெயில்வேயை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அவர்கள் அந்த ரெயிலில் 18 நாட்கள் தங்குவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது

 

Leave a Reply