shadow

மயிலாடுதுறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று வெளியில் வந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச்  செயலாளர் கண்ணன் முன் விரோதம் காரணமாக நேற்றிரவு கொடூரமாக  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கண்ணன் (வயது 31). ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும் கலைஞர் காலனியைச்  சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்தாண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன் கதிரவனைத்  தாக்கியுள்ளார்.

இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால் கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலையாகி ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்  நேற்றிரவு (17.08.2022)  கண்ணன் தன் நண்பர்கள்  ரஞ்சித் திவாகர் ஆகியோருடன்  இரு சக்கர வாகனங்களில்  கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த  கலைஞர் காலனியைச் சேர்ந்த அஜித், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனால் பயந்து கண்ணனுடன் வந்த   ரஞ்சித், திவாகர் தப்பி ஓடியுள்ளனர். அதனையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை. மார்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக்  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப்  பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியிலிருந்த  சிசிடிவி கேமரா பதிவுகளைக்  கைப்பற்றி அதனடிப்படையில்  கொலை வழக்குப் பதிந்து  அதில்  ஈடுபட்ட  அஜித், திவாகர், கதிரவன்  உள்ளிட்ட 12  பேர் அடங்கிய  கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை  நடந்த போது  கண்ணனுடன்  வந்த  திவாகரைப்  போலீஸார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி  வெட்டிக்கொலை  செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.