வெங்கையாநாயுடுவுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு: மீண்டும் பாஜகவா?
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக காங்கிரஸ் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். எம்எல்ஏக்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் ராகுல் காந்தியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திருநாவுக்கரசர். ஏற்கனவே பாஜகவில் திருநாவுக்கரசர் இருந்தவர் என்பதால் அவர் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமானவர்தான்.
இதனால் இந்த சந்திப்பு தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவராக இருந்தாலும் பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியையும் சோனியா, ராகுல் ஆகியோரையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர். கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்த ஒருவரைகாங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் சந்தித்திருப்பதை ஏற்கவே முடியாது. இதை காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள்” என்று தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.