shadow

விரைவில் எடப்பாடி விவசாயம் பார்க்க சென்றுவிடுவார்: செந்தில்பாலாஜி

இன்று காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, முதல்வர் எடப்பாடி விரைவில் தோல்வியை தழுவுவார் என்றும் அதன்பின்னர் அவர் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார் என்று தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி பேசியபோது, ‘ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் பொறுப்பாளராக உள்ள அதிமுக ஒரு மூழ்கும் கப்பல். அந்தக்கப்பலில் பயணிப்பதற்கு லட்சோப லட்ச மக்கள் தயாராக இல்லை. ஜெயலலிதா முதல்வராகத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர இவர்கள் முதல்வராகி ஆட்சி செய்ய அல்ல. குறுக்கு வழியில் முதல்வராகியுள்ள ஈபிஎஸ் இந்த அரசு இருக்கும்வரை முதல்வராக இருப்பார். பின்னர் எடப்பாடி விவசாயம் பார்க்க போய் விடுவார்.

உங்களுக்கும் ஏற்கெனவே உள்ள இயக்கத்துக்கும் மனவருத்தமா? என்று கேட்டார்கள். நான் எப்போதும் ஒரு இயக்கத்தில் இருந்துக்கொண்டு இன்னொரு இயக்கத்தில் மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொள்பவன் இல்லை. கடந்த நவ. 15-க்குப் பிறகு எந்தவித செயல்பாட்டிலும் நான் கலந்துக்கொள்ளவில்லை. காரணம் நான் திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதால் ஒதுங்கி இருந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply