shadow

வாரிசு சிக்கலில் இருக்கன்குடி மாரியம்மன்
irukkankudi
‘‘இருக்கன்குடி மாரியம்மன் சிலையைக் கண்டெடுத்தவர் பரிபூரணத்தம்மாள்; அவரின் கணவர் ராமசாமி. இந்தத் தம்பதியின் வாரிசுகள்தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என அம்மன் அருள்வாக்கு கூறியதாகத் தலவரலாறு. அன்று முதல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்தான் கோயில் பூஜைகள் மற்றும் பிற வருமானங்களைக் கவனித்து வருகின்றனர். இப்போதும் அந்த வம்சத்தில் வந்த மூன்று குடும்பத்தினர்தான் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கோயிலில் பூஜை செய்து வருகின்றனர். அந்த மூன்று குடும்பங்களின் சார்பில் 10 பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரம்பரை அறங் காவலராக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சமீபகாலமாக, திருக்கோயிலுக்கு யார் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் என்பதில் அந்த மூன்று குடும்பங்களுக்கு இடையே பூசல் உருவாகி, அந்தப் பிரச்னை பூதாகாரமாகிவிட்டது. இதற்கிடையில் திருக்கோயிலின் உண்டியல்களும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் நிரம்பி வழிந்திருக்கின்றன. உண்டியல்களைத் திறப்பதற்காக அதிகாரிகள் போயிருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், பரம்பரை அறங்காவலர் பிரச்னை தீராமல் உண்டியலைத் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கவே, உண்டியல்களை சாக்குப் பைகள் போட்டு மூடி வைத்திருக்கிறார்களாம்.’’

ஏற்கெனவே இந்தக் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்த நினைத்தபோது, அந்தக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இறுதியாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அந்த பூசாரிகளின் குடும்பச் சொத்து; எனவே, எல்லா உரிமைகளும் பூசாரிகளுக்கு இருக்கிறது. கோயில் உண்டியலைத் தவிர, மொட்டை போடுதல், சிறப்பு தரிசனக் கட்டணம் உள்பட கோயிலின் பிற வருமானத்தில் பூசாரிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு தர வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கும், கோயிலில் பூஜை செய்யும் அந்த வாரிசுக் குடும்பங்களுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டு, இருக்கன்குடி கோயிலை நிர்வகிப்பது, கண்காணிப்பது மட்டுமே இந்து அறநிலையத் துறையின் பணி என்றானது. இப்போது ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அரசுக்குக் கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கோயில் வருமானம் பல கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள் பக்தர்கள். சாமி கும்பிட சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.10-தான். ஆனால், பிளாக்கில் ரூ.50-க்கு விற்கிறார்களாம்.

அதேபோல், முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான கட்டணம் போன்றவற்றிலும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது; கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை ஏலம் விடுவதிலும், மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கும் பட்டுத் துணிகளை ஏலம் விடுவதிலும்கூட நிறைய முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள்.

இதுபோன்ற முறைகேடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்களாம்; பக்தர்கள் தட்டிக் கேட்டாலும், ஒரு பலனும் இல்லை

Leave a Reply