shadow

ராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி!

ragi1கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கு திசையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பட்டீஸ்வரம்.

இந்தத் தலத்தில் சிவனைக் குறித்து பராசக்தி தவம் புரிந்தபோது, காமதேனு தனது மகளான ‘பட்டியை’ தேவிக்கு உதவி செய்யும் பொருட்டு இவ்விடத்துக்கு அனுப்பினாள். அந்தப் பட்டி, தன் வாழ்நாள் முழுவதும் ஈசனைப் போற்றி, மனமுருகி சேவைகள் பல புரிந்து மோட்சத்தைப் பெற்றாள். பட்டி என்பவள் ஈஸ்வரனைச் சரணடைந்த இடமென்பதால், பட்டீச்சுரம் என்றானது; இங்கே கோயில் கொண்டிருக்கும் தேனுபுரீஸ்வரருக்கும் ‘பட்டீச்சுரர்’ என்றும் திருப்பெயர் ஏற்பட்டது. பட்டீச்சுரம் என்பது மருவி, காலப்போக்கில் பட்டீஸ்வரம் ஆனது என்கிறார்கள்.

ராமர் பிரதிஷ்டை செய்த சிவபெருமான் சோழ, பல்லவ, நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக் கோயில் இது. 4 வாயில்களும், 7 கோபுரங்களும், ஞானவாவி, ராமர் தீர்த்தம், தபஸ் கேணி, தெப்பக் குளம், காயத்ரி குளம் உட்பட 5 தீர்த்தங்களையும் கொண்ட திருக்கோயில் இது.

கருவறையில் பட்டீச்சுரர் இருக்க, கிழக்கு திசையில் ஞானாம்பிகை, மேற்கில் முருகன், வடக்கில் துர்கை, தெற்கில் விநாயகர் என நான்கு தெய்வங்களின் சந்நிதிகளையும் நான்கு திசைகளில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ராமர், விஷ்ணுவின் அவதாரம் என்றபோதிலும், மூன்று மகாக்ஷேத்திரங்களில் மட்டும், ராமரே சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் ஒன்று, இந்தப் பட்டீஸ்வரம் திருக்கோயில். வாலியை மறைந்திருந்து அழித்து, யுத்த தர்மத்தை மீறியதால், சாயஹத்தி தோஷம் பெற்ற ராமபிரான், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். தான் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு அபிஷேகம் செய்ய தன்னுடைய வில்லைக் கொண்டு ‘கோடி தீர்த்தம்’ உருவாக்கியிருக்கிறார்.

இங்கு இருக்கும் நந்தி, பட்டீஸ்வரருக்கு நேர் எதிரே இல்லாமல், சற்று ஒதுங்கியவாறு உள்ளது. குழந்தை ஞானசம்பந்தர் இக்கோயிலின் உள்ளே வரும்போது, வாட்டும் வெயிலால் அவரின் பாதங்கள் சுடாமல் இருக்க, நிழல் தந்தார் இந்தப் பட்டீஸ்வரர். முத்துப் பந்தலில் குழந்தை ஞானசம்பந்தர் நடந்து வரும் அழகைக் காண சிவனே நந்தியை சற்றுத் தள்ளி நிற்கச் சொன்னதாக ஐதீகம்.

பட்டீஸ்வரத்தின் நாயகி!

தேனுபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவனுக்கான திருக்கோயில் இது என்றபோதிலும், இங்கு வீற்றிருக்கும் நாயகி துர்கையின் பெருமைகளால் பட்டீஸ்வரம் துர்கை திருக்கோயில் என்றுதான் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

சோழ மன்னர்கள் போற்றி வழிபட்ட அம்பிகை இவள். இங்குள்ள துர்கை, தனது இடது தொடையில் கையை ஊன்றியபடி, ஒரு காலை சற்று முன் நிறுத்திக் காட்சியளிக்கிறாள். தொடையில் இருக்கும் அவளது கையில் கிளி ஒன்றையும், பிற கைகளில் வில், அம்பு, சங்கு, கத்தி, கேடயம் ஆகியவற்றையும் கொண்டு, காலால் மகிஷாசுரனை மிதித்தவாறு காட்சியளிக்கிறாள். பொதுவாக துர்கையின் வாகனமான சிங்கம், தன் தலையை வலதுபுறம்தான் வைத்திருக்கும். ஆனால், இங்கு சிங்கம் தனது தலையை இடதுபுறமாகத் திருப்பியிருப்பது ஒரு தனிச் சிறப்பு. இந்த வடிவம், துர்கையின் சாந்த நிலையைக் குறிக்கிறது.

பொதுவாக ஒரு மனிதனை ராகுவும் கேதுவும்தான் ஆட்சி செய்வதாகக் கூறுவோம். அந்த ராகுவையே ஆட்சி செய்பவள் இந்தப் பட்டீஸ்வரம் துர்கை. அவ்வகையில், ராகு தோஷம் உள்ளவர்கள், ராகு காலத்தில் இத்திருக்கோயிலுக்கு வந்து, துர்கையை மனமுருகி தரிசித்தால், தோஷங்கள் நிவர்த்தியடைந்து நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களில், சுப்ரமணியம்- ஷ்யாமளா தம்பதியரிடம் பேசினோம். “மன உளைச்சல் அதிகமானால் உடனடியாகக் குடும்பத்துடன் கிளம்பி இந்த துர்கையைக் காண வந்துவிடுவோம். சங்கடங்கள் ஏற்படும்போது, ‘எல்லாம் நன்மைக்கே! பட்டீஸ்வரம் துர்கை துணை இருப்பாள்’ என்று மனதில் நினைத்தோமேயானால், நிச்சயம் மன அமைதி கிடைத்துவிடும்” என்று நம்பிக்கை மிளிரச் சொல்கிறார்கள்.

“மன அமைதி மட்டுமன்றி, திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து துர்கையை முழுமனதுடன் வேண்டிக்கொண்டால், நினைத்தது நிச்சயம் நிறைவேறும்” என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார், இந்தக் கோயிலின் சித்தானந்தா சிவாச்சார்யர்.

இவர்களின் இந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் தாயுள்ளத்துடன் ஏற்று, அருள்மழைப் பொழிந்து வருகிறாள், பட்டீஸ்வரத்தின் நாயகியாம் துர்கை. அதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன, அனுதினமும் இந்த ஆலயத்தை தேடிவரும் பக்தர்களின் கூட்டமும், அவர்களது வழிபாடுகளும்.

நாமும் நம் மனத்துயரங்கள் நீங்க, மங்கலநாயகியாம் பட்டீஸ் வரம் துர்கையை வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை; மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

Leave a Reply