shadow

முதல் 3டி இரும்புப் பாலம்

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமின் குறுக்கே ஆம்ஸ்டல் நதியை நோக்கிக் கால்வாய் செல்கிறது. இதனால் இந்த நகரத்தில் சிறு சிறு பாலங்கள் அதிகம். அந்த மாதிரியான பாலம் ஒன்றைச் சமீபத்தில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் (3d) உருவாக்கியுள்ளனர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

ஏற்கெனவே உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3D printing) உலகின் முதல் வீடு நெதர்லாந்தில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம். கணினியில் நாம் தட்டச்சு செய்யும் ஆவணங்களை எப்படி அப்படியோ பிரிண்ட் எடுக்கிறோமோ அப்படியே ஒரு வீட்டின் ப்ளானை மென்பொருட்களில் வரைந்து, ஒரு வீட்டையே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். அதுபோலத்தான் பாலமும். காகிதம், மை ஆகியவற்றுக்குப் பதிலாக வீட்டின் மூலப் பொருட்களை இட வேண்டும். கான்கிரீட்டால் ஆன பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைத்ததில் சில விஷேசத்தன்மை உண்டு. இது முழுக்க இரும்பால் ஆன பாலம்.

இந்தத் தொழிநுட்பம் தற்போது வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் இங்கிலாந்து ஆலன் டியூரிங் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரும்புப் பாலத்தையும் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

கட்டுமானத் தொழிலானது மிகவும் மாசு ஏற்படுத்தும் துறையாக இருந்து வருகிறது. இம்மாதிரியான வீடுகள் கட்டப்படுவது பெருகும் நிலையில் மாசு குறையும் வாய்ப்பு உள்ளது. முப்பரிமாண அச்சாக்க முறையில் போக்குவரத்துச் செலவுகள் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும், எல்லாவிதப் பொருட்களும் உருக்கிப் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியும் செய்யப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பம் MX3D என அழைக்கப்படுகிறது. முழுவதும் 3டி ரோபோட் கட்டிவரும் இந்தப் பாலத்தின் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு இதைக் கால்வாயின் குறுக்கே நிறுவும் பணி மேற்கொள்ளப்படும் என்கிறார் ஆலன் டியூரிங் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் கிரோலமி. இது வெற்றியாகும் பட்சத்தில் உலகின் முதல் 3டி பாலத்தை உருவாக்கிய பெருமை கொண்ட நெதலர்லாந்துக்கே முதல் 3டி இரும்புப் பாலம் உருவாக்கிய பெருமையும் சேரும்.

Leave a Reply