shadow

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை: கேஜ்ரிவால் சரமாரி கேள்வி

மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக ஒருசில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு, இனிவரும் தேர்தல் வாக்குச்சீட்டு மூலம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் முடிந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக்கிங் செய்யலாம் என சவால் விட்டது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் கட்சிகளுக்கான சவால் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிக்கை ஏதும் அனுப்பவில்லை. ஆனால், தேர்தல் ஆணைய வட்டார தகவல் என்ற பெயரில் இச்செய்தி உலா வருகிறது.

தேர்தல் ஆணையம் ஏன் இதை ‘தகவல்’ என்ற பெயரில் கசியவிட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏன் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடக்கூடாது. அப்படியென்றால் தேர்தல் ஆணையம் வெறும் பெயரளவு அமைப்பு மட்டும்தானா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிக்கையை பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?” என அடுத்தடுத்த ட்வீட்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply