shadow

மார்ச் 1ஆம் தேதி மாசி மகம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடுவோமா

ஒரு சமயம், படைக்கும் கடவுளான பிரம்ம தேவன் கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் காணச் சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளய காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளதாகக் கூறினார். அத்துடன், பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம் (படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்துவிட்டால் எப்படி, தான் படைப்புத் தொழிலை மேற்கொள்ள முடியும் என்றும் சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவர் வினவினார்.

அப்போது, சிவபெருமான் அமுதத்தையும் மண்ணையும் சேர்த்துப் பிசைந்து மாயமாகிய குடத்தைச் செய்து அதில் அமுதத்தை நிரப்பினார். இந்தக் குடத்தில் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டியை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறங்களிலும் வைத்து, அதில் நிறைய அமுதத்தைச் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர், குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றைச் சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார். பின்னர், அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேரு மலையில் ஓர் இடத்தில் வைக்க வேண்டுமென்றும் கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டியதை நாம் செய்திடுவோம் என சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார்.

சிவபெருமானுக்காகக் காத்திருந்த பிரம்மன்

பிரளய வெள்ளத்தின்போது மகா மேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும். அப்போது அந்த இடத்தில் தான் (சிவபெருமான்) தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பிவைத்தார்.

சிவபெருமான் கூறியபடியே பிரம்ம தேவனும் மகாமேரு மலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

அதையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்கப் பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாகக் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது.

அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம் (கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்துக்கு வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை, தர்ப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாயின.

மீண்டும் வடமேற்குத் திசையில் சென்று ஓர் இடத்தில் அந்தக் குடம் தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும் தேவர்களும் அதைத் தொடர்ந்து வந்தனர்.

அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக (வேட ரூபத்தில்) எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்து அந்த அமிர்தக் குடத்தை உடைத்தார். அப்போது மாயக்குடம் இரண்டாக உடைந்து அதில் வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாகப் பெருகி எட்டுத் திசைகளிலும் சென்றது. அதே போல் தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன.

கலசத்திலிருந்து கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடவாசல் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்ற திருத்தலம் கும்பகோணம் என்கிறது தலபுராணம்.

மாசி மகம் ஏன் ?

மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும்போது பவுர்ணமி நாளில் மக நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடிய நன்னாளே மகாமகத் திருநாளாகும். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது. இந்த நாளைத் தான் மகாமகம் என்றழைக்கிறோம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகிய ஒன்பது புண்ணிய நதி தேவதைகளும் சிவபெருமானான காசி விஸ்வநாதரைக் காசியில் வழிபட்டு மனிதர்கள் அனைவரும் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள எங்களிடம் வருகிறார்கள். அவர்களின் பாவச் சுமைகளைத் தாங்கிய நாங்கள் எவ்வாறு எங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியும் என்று கேட்டனர்.

அதற்கு சிவபெருமான் திருக்குடந்தையில் நடைபெறும் மகாமகப் பெருவிழாவில் நீங்கள் அனைவரும் சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடினால் உங்கள் பாவங்கள் தொலையும். அங்கு உங்களுக்கு நான், அம்மனுடன் காசி விஸ்வநாதராக அருள்பாலிப்பேன் எனக் கூறியதாக புராண வரலாறு சொல்கிறது.

அதன்படியே புண்ணிய நதிகள் அஷ்ட திக்கு பாலகர்கள், பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக தீர்த்தம் ஆகியவை இங்கு வந்து சங்கமிப்பதால் இந்த மகாமகப் பெருவிழா புண்ணிய விழாவாகப் போற்றப்படுகிறது. அமிர்தம் சிந்திய மகாமக குளத்தின் நடுவே 20 தீர்த்தங்கள் உள்ளன. அவை வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை, குபேர தீர்த்தம், கோதாவரி, ஈசானிய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி, யம, குமரி, நிருதி, பயோடினி, தேவ, வருண, சரயு தீர்த்தங்கள் மற்றும் கன்னிகா தீர்த்தம் உள்ளிட்ட 20 தீர்த்தங்கள் உள்ளன. இதில் கன்னிகா தீர்த்தத்தில் மட்டும் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா வரும் மார்ச் 1 அன்று கும்பகோணத்தில் கொண்டாடப்படவுள்ளது. கும்பகோணம் மகாமகக் குளத்தில் புண்ணிய நதிகளே நீராடி பாவங்களைப் போக்கிக்கொண்டதால், நாமும் புனிதநீராடி பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம்.

Leave a Reply