shadow

குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள இனுங்கூர் காஜா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பவுனு என்கின்ற பழனியப்பன் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சபல புத்தி கொண்ட இவர் சிறுமிகளிடம் எல்லை மீறுவதையும், அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியினர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காலையில் அவர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுவிட்டு மதிய நேரத்தில் வீடு திரும்புவாள்.

அப்போது வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர், 50 வயதை தாண்டியவர் என்பதால் அக்கம் பக்கத்தினர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களாக உடல் சோர்வு ஏற்பட்டதோடு, இரவில் வலியால் துடித்துள்ளார். பெற்றோர் விசாரித்தபோது மழலை மொழியில் தனக்கு நடந்தது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் பழனியப்பனை கைது செய்தனர். பின்னர் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் திருச்சி அருகே 10 வயது சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆராய்ச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (39). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேலைக்கு செல்லும் போது தொட்டியத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்படுவது, ஓய்வு எடுப்பதை நாகராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிலுள்ள 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை நாகராஜ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாமன் உறவு முறை கொண்ட அவரின் அத்துமீறலை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நாகராஜ் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.