shadow

புதுடெல்லி, கடந்த ஜூன் மாத இறுதியில் சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

இதையடுத்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் மதுரையில் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தமிழக அரசு சார்பில் பழனிவேல் தியாகராஜன் வைத்த கோரிக்கையை ஏற்று இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று டெல்லி சென்றுள்ள தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மதுரையில் நடைபெறவுள்ள 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கான தேதியை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற இந்த திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.