shadow

மணமேடையில் மணமகனை சுட்டுக்கொன்ற நண்பர்: அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின்போது மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை அவரது நண்பரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியர்களின் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுடுவது வழக்கமான ஒன்றே.. இந்த நிலையில் உபியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணத்தின்போது மணமகன் சுனில் வர்மா (26) மேடையில் அமர்ந்திருந்தார். மணமகனுக்குரிய சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மணமகனுக்கு எதிர்த்திசையில் அவரின் நண்பர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மணமகனின் நண்பர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை சுட்டார். இதில் முதல் குண்டு வெளியில் பாய்ந்தது. 2-வது குண்டு எதிர்பாராத விதமாக மணமகனின் மார்பில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து மணமகனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் மணமகனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகனைச் சுட்ட அவரின் நண்பர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மணமகனின் நண்பர் வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கி என போலீசார் தெரிவித்தனர். மணமகனைத் துப்பாக்கியால் சுடும் காட்சி தொடர்பான வீடியோ அனைத்து இந்தி தொலைக்காட்சிகளிலும் வெளியானது. சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வைரலானது.

மணமகனுக்கும் அவரின் நண்பருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததா, அல்லது ஏதேச்சையாக துப்பாக்கிக் குண்டு வெடித்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மணமகனை சுட்டுக் கொன்ற ராமசந்திரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply