shadow

பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை: தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 23-இல் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தேர்வுக்கு 1,058 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு கடந்த செப்.16-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற்றது.

மொத்தம் 1, 70,366 பேர் தேர்வுக்குப் பதிவுசெய்திருந்தனர். அதில் 1,33,567 பேர் பங்கேற்றனர்.

தாற்காலிக விடைக் குறிப்பு கடந்த அக்.6-ஆம் தேதி வெளியிடப்பட்டு தேர்வர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து இறுதி விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வர்கள் அவர்களது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு முன்னுரிமைக்கான காலிப்பணியிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போட்டி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இனவாரியான இட ஒதுக்கீட்டின்படி தகுதியுள்ளவர் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி வரும் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முழுவிவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பார்க்கலாம்.

Leave a Reply