பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரே நாளில் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நிர்மலா சீதாராமன்
கடந்த ஆண்டு இதே நாளில் தான் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கையால் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரித்து வரும் நிலையில் பாஜக கட்சி சார்பில் இன்று தேசிய கருப்புப்பண ஒழிப்பு நாளாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை நடேசன் பூங்காவில் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற இந்த அறிவிப்பு ஒரே நாளில் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு செயல்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றே பணமதிப்பு நீக்க நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் நாட்டில் பொருளாதார வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.