shadow

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?


சிதம்பரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை (பயிற்றுநர்கள்) பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 2012-ஆம் ஆண்டு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதம், ஒரு மாதத்தில் 12 அரை நாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2,000 ஊதியம் உயர்த்தப்பட்டு, ரூ.7.000 வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பண்டிகைக் கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்படுகிறது.

மகளிர் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படவில்லை. பணி நியமனம், பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:

14-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 16,549 பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமல்படுத்த வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15,000, ஹரியாணாவில் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

எனவே, அதே நடைமுறையை தமிழத்திலும் அமல்படுத்த வேண்டும். பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது, பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே, பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 2011-12-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் பகுதிநேர பயிற்றுநர்களை நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply