shadow

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல், தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பானம்தான் என்றாலும் அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லதல்ல என்கிறார். தேநீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் அமிலங்களை தூண்டி செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். வெறும் வயிற்றில் பருகப்படும் டீ ஏற்படுத்தும் மேலும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம். தலைவலி: தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது. டீக்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருகுவது தலைவலியின் வீரியத்தை குறைக்க உதவும். அஜீரணம் – நீரிழப்பு: வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும். தேநீரில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும். இரவில் பல மணி நேர தூக்கம் காரணமாக ஏற்கனவே உடல் நீரிழப்புடன் காணப்படும். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால், நீரிழப்பை அதிகப்படுத்திவிடும். தேநீரில் உள்ள தியோபிலின் என்ற ரசாயனப் பொருளும் நீரிழப்பை அதிகப் படுத்திவிடும். மலச்சிக்கலுக்கும் வழிவகுத்துவிடும் என்கிறார், ரோகினி பாட்டீல். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும்: தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் தேநீரில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும். அசிடிட்டி பிரச்சினை ஏற்படும் வயிற்றில் இருக்கும் திரவங்களின் செயல்பாடுகளுக்கு தேநீர் தொந்தரவு ஏற்படுத்தும். அமில, கார சம நிலையையும் சீர்குலைக்கும். அசிடிட்டி பிரச்சினை தலைதூக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும். கீழ் மார்பில் வலியை உணரக்கூடும். வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதற்கு பதிலாக ஏதேனும் சிற்றுண்டி உட்கொள்ளலாம். குறிப்பாக சிறிதளவு நட்ஸ் வகைகளை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்துவது சிறப்பானது. தேநீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் நடைபெறுவதற்கும் வித்திடும். ”தேநீர் அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்” என்கிறார், டாக்டர் ரோகினி பாட்டீல்.