shadow

நல்லன அருளும் நந்தி தரிசனம்!

நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர்.

`சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர்.

எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். ஸ்ரீநந்திதேவர், இறைவனிடம் சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்குபவர். அதனால்தான் பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது.

சிவ தரிசனத்தில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதும் ஸ்ரீநந்தி எம்பெருமானைத் தரிசிப்பதே ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனைத் தரிசிப்பது, நமது வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்குத் தகுந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றி வைப்பார் என்பதால்தான்.

நந்தி எம்பெருமானுக்குத் திவ்விய வடிவமும், நெற்றிக்கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானையுரியும், இரண்டு புயங்களில் மானும் மழுவும் உள்ளன. மான் வேகத்தைக் குறிக்கிறது; மழு வீரத்தைக் குறிக்கிறது என்பர். எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வுபடுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரம் நந்தி எம்பெருமானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நந்தி எம்பெருமான், சிவபெருமானிடம் இருந்து சிவ ஆகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்பர். தப்பிதம் செய்தாரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்குண்டு. இவர் சிவ சந்நிதியில் காவல் இருக்கிறார். இவரது அனுமதி பெற்றுதான் சிவபெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

நந்தி தட்சயாகத்தின்போது சிவனாரைப் பழித்துப் பேசிய தட்சனையும் உடனிருந்த தேவர்களையும் சபித்தார். இவர், சிவயோகத்தில் மிக வல்லவர். திருமந்திரம் அருளிய திருமூலருக்கு ஸ்ரீநந்தி எம்பெருமான் ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளினார். அதன்பின், திருமூலர் பூலோகத்துக்கு வந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகம் புரிந்தார்.

திருமூலர், தமது திருமந்திரத்தில் ஸ்ரீநந்திதேவரை சைவ சமயத்துக்குத் தனி நாயகன் என்று குறிப்பிடுகிறார். மேலும், `சிவபெருமானின் சீடர்களில் முதல்நிலை உடையவர் நந்தி; அவரால்தான் நான் ஆசிரியன் ஆனேன்’ என்றும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர் ஆகிய ஏழு பேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் திகழ்கிறார். இந்த எட்டு சீடர்களும் சைவ சமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டினை பரப்பவும், சிவப்பரம்பொருளின் பெருமையைப் பற்றியும், ஸ்ரீநந்தி எம்பெருமானின் மரபினைப் பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்துச்சொல்வதற்காக நமது தேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.

ஸ்ரீநந்தி எம்பெருமான், சிவபெருமானிடத்தில் உபதேசம் பெற்றவராதலால் இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தெரிசனிகளும், சத்தியஞான தெரிசனிகளிடமிருந்து மெய்க்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இது குரு பரம்பரை அல்லது திருக்கயிலாய பரம்பரை எனக் கூறப்படும்.

ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் ஆகியன நந்திதேவரின் திருப்பெயர்கள்.

தமிழக மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நந்தி எம்பெருமானை `விடைரூப’மாக வணங்கியதற்குச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இத்தகைய சிறப்புகளோடு திகழும் நந்திதேவரை பிரதோஷக் காலத்தில் தரிசித்து வழிபட்டு அவரின் திருவருளைப் பெறுவது, நமது வாழ்வைச் சிறப்பாக்கும். வரும் (மார்ச்) 25-ம் தேதி சனிப்பிரதோஷம். அன்றைய தினம் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்திதேவரைத் தரிசித்து, நல்லன எல்லாவற்றையும் வரமாகப் பெற்று மகிழுங்கள்.

Leave a Reply