shadow

பருவ காலம் மாறும்போதும், புதிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள தண்ணீர் குடிக்கும்போதும், அங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாகவும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்: ஆடாதோடை இலை 2, மிளகு 5 எடுத்து, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாம்பார் வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும். பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும். வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் 1 அல்லது 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.