shadow

டாஸ்மாக் ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்: குடிமகன்கள் அதிர்ச்சி!..

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களை இதுநாள் வரையிலும் பணிநிரந்தரம் செய்யவில்லை. 480 நாட்கள் வேலைக்குச்சென்றாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும், அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய, வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். 6 ஆயிரம் கடைகளும் 2 நாட்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும். இந்த வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply