ஜியோ 4ஜி சலுகை மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவச அழைப்புகள், மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டில் 25% கட்டணம், 1ஜிபி 4ஜி டேட்டாவின் விலை 50 ரூபாய் மற்றும் ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகளை ஜியோ வழங்கியது.
இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் கலக்கமடைந்தன. அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மற்ற நிறுவனங்கள் மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.
இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.