shadow

சென்னையை நெருங்குகிறது புயல்!…

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி இருப்பதாகவும், இந்த காற்றழுத்த பகுதி தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் வரை பரவியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 14-ந்தேதி சென்னை அருகே மையம் கொண்டு 15-ந் தேதி காலை சென்னையை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இருப்பினும் வரும் 13-ந்தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply