shadow

சிவலிங்க முத்திரை என்றால் என்ன?

2அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வெளியில், பல்லாயிரக்கணக்கான வடிவங்களும், வஸ்துக்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. சுயம்புவாகத் தோன்றியும், தேவர்களாலும், மனிதர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டும் வணங்கப்பட்டு வருகின்றது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.

எப்படிச் செய்வது?

ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் (படம் பார்க்க). கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம்.

பலன்கள்

சிவலிங்க வடிவம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் பஞ்ச பூதங்களும் லயத்தோடு செயல்படுகின்றன. அதேபோல், சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.

உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.

சிவம் தேவையற்றதை எரித்துச் சாம்பலாக்கிச் சம்ஹாரம் செய்வதைப்போல், சிவலிங்க முத்திரை நம் உடலில் குடியிருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழித்து, நல்ல சக்தியை நிலைநாட்டுகிறது.

யோகமுறையில் விடாமுயற்சியுடன் இறைவனை அடைய விரும்புவோரும், புனித வாழ்க்கை வாழ விரும்புவோரும் சோர்வின்றித் தங்கள் பயணத்தைத் தொடர, சிவலிங்க முத்திரையைத் தொடர்ந்து செய்து வரலாம்.

Leave a Reply