shadow

சபரிமலையில் சமூகவிரோதிகள்: கவிதா அதிர்ச்சி தகவல்

என்னை சபரிமலை ஐயப்பன் சன்னிதிக்குள் செல்ல விடாமல் சில சமூக விரோதிகள் தடுத்துவிட்டனர் என நேற்று சபரிமலைக்கு சென்று திரும்பிய பத்திரிகையாளர் கவிதா கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நான் ஒரு பத்திரிகையாளர். அந்த வகையில் சபரிமலைக்கு சென்று நான் எனது கடமையைத்தான் செய்தேன். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு, சபரிமலையில் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்ற செய்தியை சேகரிக்கவே வந்தேன்.

நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண். எனவே சபரிமலைக்கு சென்றதில் தவறில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் என்னை கைது செய்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விமான நிலையத்துக்கு அழைத்து வந்து விட்டனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபட தேவசம் போர்டு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு சிலரது நெருக்கடிகள் காரணமாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் தான் என்னை ஐயப்பனை வழிபட விடாமல் தடுத்து விட்டனர்.

சன்னிதானம் அருகே என்னை எந்த பக்கமும் நகர விடாமல் தடுத்தனர். அங்கு நான் என் கடமையை செய்யவிடாமல் தடுக்கப்பட்டேன். நிர்வாகம் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பதை நான் நேரில் பார்த்தேன்.

நான் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கி செல்வதற்கு கேரள அரசும், கேரள போலீசாரும் முழு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளித்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னிதானத்தை நான் நெருங்கியபோது சில சமூக விரோதிகள்தான் என்னை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். நான் முன்னேறி விடாமல் இருப்பதற்காக வயதான பெண்களையும், சிறுவர்களையும் கேடயமாக பயன்படுத்தினார்கள். இதனால் அங்கு ஆபத்தான சூழ்நிலை உருவானது.

என்றாலும் சன்னிதானம் முன்பு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட எனக்கு உரிய பாதுகாப்பு தர கேரள போலீசார் முன் வந்தனர். ஆனால் வயதான பெண்கள், சிறுவர்கள் நலன் கருதி நான் தொடர்ந்து செல்லவில்லை.

வாய்ப்பு கிடைத்தால் சபரிமலைக்கு மீண்டும் வர தயாராக இருக்கிறேன். சபரிமலையில் நான் வழிபாடு செய்ய விரும்புகிறேன். பத்திரிகையாளர் என்ற முறையில் அங்கு என் கடமையை செய்யவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு கவிதா கூறியுள்ளார்.

Leave a Reply