shadow

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்

நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம்.

அந்த காலங்களில் பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே சொல்லிதரப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப்பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என ‘ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும்.

குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம். அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயையும் துடைக்க வேண்டும்.

இரவில் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.

Leave a Reply