shadow

காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் ,இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கல பதக்கம் வென்றார். இதனைதொடரந்து, ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார்.

அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோசலுக்கு வாழ்த்துகள். ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்ததன் மூலம் இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.” மற்றொரு டுவிட்டர் பதிவில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குவதில் சிறந்த முயற்சிக்கும் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற குர்தீப் சிங்கிற்கு வாழ்த்துகள். உங்கள் உற்சாகமான தூக்குதல் மற்றும் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

இனிவரும் காலங்களில் நீங்கள் வெற்றியின் புதிய உயரங்களைத் தொடரலாம்.” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்