shadow

கரையை கடந்த டிட்லி புயல்: ஒடிஷாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக்கடலில் உருவாகிய டிட்லி புயல் இன்று அதிகாலை ஒடிஷா மாநிலத்தின் கோபால்பூருக்கும் ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply