shadow

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பிரமுகர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் சிகே குமரவேல் அவர்கள் வெளியேறினார். அவர் கமலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2019 இல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிப் போனாலும் தமிழகத்தில் உங்களாலும் மக்கள் நீதி மய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் மீண்டும் இணைந்தேன். மக்களிடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் கட்சியினர் நடவடிக்கைகளாலும் உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும் நம்பிக்கையும் அதிகரித்ததை நான் கண்கூடாக பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து மய்யத்தின் டார்ச்லைட் சின்னம் மீண்டும் கிடைத்தபோதும், திரு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த போதும் மக்கள் நீதி மய்யத்தின் மீதான அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது

ஆனால் இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்தபோதும் ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழிநடத்தல் தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது

நமது தோல்விக்கான காரணங்களையும் காரணிகளையும் இதற்குமுன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும் ஊடகங்கள் முன்னும் வைத்து விட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்கள் ஆக மாறி விட்டோமே என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. ஆகவே மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.

இவ்வாறு சிகே குமரவேல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்