கடைசி போட்டியில் உலக சாதனை செய்த மெக்கல்லம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான மெக்கல்லம் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி போட்டியில் 54 பந்துகளில் சதமடித்து உலக சாதனை செய்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் வெலிங்டன் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய கோரியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிய நிலையில் களமிறங்கிய மெக்கல்லம், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் அரைசதம் எடுத்த பின்னரும் அதிரடியை தொடர்ந்த மெக்கல்லம், 54 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளில் சதம் அடித்ததே உலகசாதனையாக இருந்தது.
இந்நிலையில் நேற்றைய முதல் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 145 ரன்களும், ஆண்டர்சன் 72 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.