shadow

கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?

ன்றைக்கு வீடு என்பது வங்கிக் கடன் இன்றி சாத்தியமல்ல என்றாகிவிட்டது. அப்படி வாங்கப்படும் வீட்டுக்கு 10 வருஷம், 20 வருஷம் என மாதத் தவணை கட்ட வேண்டியிருக்கும். அப்படி மாதத் தவணை கட்டிக்கொண்டிருக்கும்போதே அந்த வீட்டை விற்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பணி இட மாற்றம் காரணமாக அந்த வீட்டை விற்க நினைக்கலாம். விற்க முடியும்தான். ஆனால் அதற்குச் சில நடைமுறைகள் இருக்கின்றன.

வங்கிக் கடன் என்பது வங்கியில் நமது வீட்டின் அடமானத்தின் பெயரில் வாங்கப்படுவது. அப்படி அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை வாங்குபவருக்கும் வங்கிக் கடன் தேவைப்படுகிறது என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமான வீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்க இருப்பவரிடம் கொடுக்க வேண்டும். இந்த மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும்.

ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும். கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும். அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது.

வீட்டை வாங்குபவர், முழுத் தொகையும் செலுத்தி வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அதற்கும் சில தனித்த முறைகள் இருக்கின்றன. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும். இவை தவிர, சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமான வீடு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்க இருப்பவரிடம் கொடுக்க வேண்டும்.

வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழு தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Leave a Reply